Search This Blog

Thursday, 29 August 2013

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் பங்கு

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் பங்கு

இன்றைய இளைஞர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். நாகரீகம் என்ற பெயரில், கேளிக்கைகளிலும், அனாச்சார வழிகளிலும் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள், இவ்வாறு ஆடம்பர மோகம் கொண்டு திரியவும், அழிந்து போகவும் காரணமாக இருப்பது யார் என்று சிந்திக்க வேண்டும். அவர்களை நேர்வழியில் நடத்தத் தவறியவர்கள் அவர்களது பெற்றோர் தான். குழந்தைப் பருவத்தில் இருந்தே முதற்கடமையாக அவர்களுக்கு குர்ஆனை போதித்திருக்க வேண்டும். முறைப்படி மார்க்கபோதனை பெறாத குழந்தை முதலில் ஒழுக்கம் தவறுகிறது. அடுத்து, அந்தக் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கிறார்கள். அங்கே பலதிறப்பட்ட குண நடத்தைகள் கொண்ட குழந்தைகளுடன் அது பழகுகிறது. அந்தச் சூழலுக்கு ஒப்ப தன்னை வளர்த்துக் கொள்கிறது. இதனால், கடமையையும் கண்ணியத்தையும் இழந்து விடுகிறது. இரண்டையும் தவற விட்ட குழந்தைகள் இளைஞர்களாக மாறியதும், நாகரீகம், ஆடம்பரம் என்ற அழிவுத்தன்மைகளுக்கு ஆட்படுகிறார்கள்.
அதன் பலனாக பெற்றோரின் மணிமொழிகளுக்கும் மதிப்புக் கொடுக்காதவராக மாறி விடுகிறார்கள். இல்லை... இல்லை... மாற்றப்பட்டு விடுகிறார்கள். இவர்கள், மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், மார்க்கத்தின் உயர்வை, உண்மையை உணராமல் குறை கூறித்திரிவதோடு, இறைவனை அலட்சியப்படுத்திவிட்டு, அல்லலை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது அவர்களுடைய குற்றமல்ல. அவர்களைக் குற்றவாளி என்று ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.
ஆரம்பத்தில் பெற்றோர் தங்கள் கடமையைச் செய்யத் தவறியதால் தான் இத்தகைய நிலை ஏற்பட்டது. நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் இதுபற்றி கூறும் போது, ""உங்கள் குழந்தைகளை மூன்று குணங்களைக் கொண்டு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். 1. உங்கள் நபியைப் பிரியப்படுவது. 2. நபியின் குடும்பத்தார் மீது அன்பு வைப்பது. 3. குர்ஆனை ஓத வைப்பது. ஏனெனில், குர்ஆனை நெஞ்சில் பதித்தவர்கள், நிழல் என்பதே இல்லாத நாளில், அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலில், நபிமார்கள் சஹாபாக்களுடன் இருப்பார்கள்,''. குழந்தைகளை நல்வழிப்படுத்தும் முயற்சியில், இன்றே பெற்றோர் ஈடுபடலாமே!

No comments:

Post a Comment