Search This Blog

Tuesday, 15 April 2014

ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!

ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!

கிருபானந்த வாரியார் வாரத்தின் ஏழு நாட்களும் இறைவனை வணங்க ஏழு சின்னச்சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப் பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன. ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம் தினம் சொல்லலுங்கள். கந்தவேல் கருணையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை

தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி
மீயுயர் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி

திங்கட்கிழமை

துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதம் போற்றி

செவ்வாய்க்கிழமை

செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி
தெவ்வாதனை இல்லாத பரையோகியர் சிவதேசிக போற்றி
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி

புதன்கிழமை

மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி

வியாழக்கிழமை

மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி
தயாளசீலா தணிகை முதல் தளர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி

வெள்ளிக்கிழமை

அள்ளி வழங்கும் ஆறுமுகத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே
வெள்ளிமலைநேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி

சனிக்கிழமை

கனிவாய் வள்ளி தெய்வயானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி

இவ்வாறு  கிருபானந்த வாரியார் இயற்றிய தினம் ஒரு துதியைக் கூறுவதன் மூலம் இறைவனின் பரிபூரண அருளைப் பெறலாம்.
  

No comments:

Post a Comment