Search This Blog

Wednesday, 19 February 2014

கோடீஸ்வர யோகம் தரும் மாசிமக விரதம்

கோடீஸ்வர யோகம் தரும் மாசிமக விரதம்

எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக் கூடியவர். அதே நேரத்தில் கோடீஸ்வர யோகத்தையும் அள்ளித் தரும் வல்லமை உள்ளவர்.

மங்களகரமான மாசி மாதத்தில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் சந்திரன்வருகிறது. அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன் கும்ப ராசியில் இரந்து சந்திரனை பார்க்கும் காலம். மாசி மாத மக நட்சத்திரத்துடன் பவுர்ணமி இணைவதே மாசி மகமாக திகழ்கிறது. இந்நாள் எல்லா தெய்வங்களுக்கும் மிகவும் உகந்த நாளாகும்.

கோவில்களில் சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், யாகங்கள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. உமாதேவியார் அவதாரம் செய்த நாளாகவும் பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்த நாளாகவும், சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாகவும் மாசி மகம் திகழ்கிறது.

இந்த பிறவிப் பெருங்கடலை கடந்து, பிறவாவரம் வேண்டி இறைவனின் அருட்கடலை வேண்டும் நாள்தான் இந்நாள். ஆகையால் தான் மோட்சத்தை அருளக்கூடிய கேது பகவான் நட்சத்திரமான மகத்தில் இந்த நாள் அமைகிறது.

இதனை கடலாடும்நாள் என்றும், தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். இந்நாளில் குலதெய்வ, இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானங்களை செய்வது விசேஷம். இந்நாளில் விரதம் இருந்து பிரார்த்தனை செய்வதால் குடும்பத்தில் ஒற்றுமை, சகல தோஷ நிவர்த்தி ஏற்படும்.

No comments:

Post a Comment