Search This Blog

Sunday, 9 February 2014

நெய்வேலி அருகே குளிர்பானம் குடித்த சிறுமி மரணம்!: மூவர் கவலைக்கிடம்

நெய்வேலி அருகே குளிர்பானம் குடித்த சிறுமி மரணம்!: மூவர் கவலைக்கிடம்

நெய்வேலி: நெய்வேலி அருகே குளிர்பானம் குடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மூன்றுபேர் கவலைக்கிடமான வகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, குளிர்பானம் குடித்த 9 வயது சிறுமி ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 3 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெய்வேலியை அடுத்த தெற்கு சேப்பளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி என்பவர், தனது குழந்தைகளுக்கு அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பிலான குளிர்பானத்தை வாங்கி கொடுத்துள்ளார். அதனை குடித்த அவரது நான்கு குழந்தைகளும் சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.
இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தைகளை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, அபிராமி என்ற 9 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 3 குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார், குளிர்பானத்தை விற்பனை செய்த நாகரத்தினம், விநியோகம் செய்த பாபு ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நாகரத்தினம் கடையை ஆய்வு செய்து சீல் வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment