முள் போன்ற துன்பமும் இல்லாது போகும்!
குந்தவி என்பவள் கட்டிய சிவன் கோயில்தான் திருச்செந்துறையிலுள்ள சந்திரசேகர சுவாமி ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவியின் பெயர் மானேந்தியவல்லி. மிருகதராம்பிகா என்பது அன்னையின் இன்னொரு பெயராகும். இங்கு ஆலயம் உருவாகக் காரணமான பலாமரமே ஆலயத்தின் தலவிருட்சமாகியிருக்கிறது. அது மட்டுமல்ல; இங்கு கருவறையில் அருள்பாலிக்கும் இறைவனின் பாணம் முழுவதும் பலாப் பழத்தின் மேல் பகுதிபோல முட்களுடன் அமைந்திருப்பது வியக்க வைக்கிறது. பொதுவாகவே பலாமரங்கள் ஆண்டில் மூன்று மாதங்கள்தான் காய்க்கும்.
வேர்ப் பலா எனப்படும் பலா வேரில் மட்டுமே காய்க்கும். கிளைப்பலா எனப்படும் பலா கிளைகளில் மட்டுமே காய்க்கும். ஆனால், இங்குள்ள பலாமரமோ வேரிலும், கிளைகளிலுமாகக் காய்த்துக் குலுங்குகிறது. பொதுவாக ஒரு பலாப் பழத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட சுளைகள் இருக்கும். ஆனால், இந்த மரத்துப் பலாவில் இருபது சுளைகள் மட்டுமே இருப்பது இன்னொரு அதிசயம். ஆனால், இந்தப் பலாப்பழத்தை எவரும் உண்ணக் கூடாது என்றும், மீறி உண்டால் பல விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் சொல்கிறார்கள். அதற்கு கண்கூடான பல நிகழ்வுகளையும் ஆதாரமாகக் கூறுகின்றனர். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இந்த ஊரில் வேறு எங்குமே பலாமரங்களே கிடையாது என்பதுதான்!
குழந்தைப் பேறு வேண்டும் பெண்கள் தலவிருட்சமான பலாமரத்தில் துணியினால் தூளி கட்டி பொம்மைக் குழந்தையை அதில் கிடத்தி இந்தத் தலவிருட்சத்தை சுற்றி வருகின்றனர். பின்னர் இறைவனுக்கும், இறைவிக்கும் அர்ச்சனை செய்கின்றனர். விரைவில் அவர்களது பிரார்த்தனை பலித்து விடுகிறது.
இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து நிலை அழகிய ராஜகோபுரம். பின்னர் நீண்ட வெளிப் பிராகாரம். அதை அடுத்து முன் முகப்பு. உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம். அங்கே வேலைப்பாடுகளுடன் கூடிய 33 கல் தூண்கள் அமைந்துள்ளன. வலதுபுறம் அன்னை மானேந்தியவல்லியின் சந்நதி உள்ளது.
அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் வலது கரத்தில் மழுவையும் மேல் இடது கரத்தில் மானையும் தாங்கி கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் இன்முகம் காட்டி அன்னை தென்முகம் நோக்கி அருள்பாலிக்கிறாள். இறைவியின் தேவ கோட்டத்தில் மூலவரான அன்னையின் ஐந்து திருவுருவச் சிலைகள் அதே வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இது இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று. மகாமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். கிழக்கில் கால பைரவர் மற்றும் சூரியனின் திருமேனிகள் உள்ளன.
ஆனி மாதம் கடைசி வாரத்தில் அஸ்தமன சூரியன் தன் பொற்கதிர்களால் மாகமண்டப மேற்கூரை சாளரம் வழியே இங்குள்ள இறைவனின் மீது பரவுவது மெய்சிலிர்க்க வைப்பதாகும். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் இடதுபுறம் வல்லப கணபதி, வல்லபையை தனது மடியில் அமர்த்தியபடி காட்சி தருகிறார். வலதுபுறம் தண்டாயுதபாணியின் திருமேனி உள்ளது. மேலும், தனிமண்டபத்தில் சோமாஸ்கந்தர், பிரதோஷ நாயகர், சந்திரசேகரர் மற்றும் இறைவியின் உற்சவ சிலைகள் உள்ளன.
அர்த்த மண்டபத்தில் உள்ள நான்கு கல் தூண்களில் சிவபெருமானின் 64 தாண்டவ வடிவங்கள் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. இறைவனின் தேவகோட்டத்தின் தென்புறம் பசுபதீஸ்வரரும் தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர். மேல்திசையில் அர்த்த நாரீஸ்வரரும் வடக்கில் சிவ துர்க்கையும் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். பிராகாரத்தில் தென்புறம் காசிவிஸ்வநாதர், காசிவிசாலாட்சிக்குத் தனிச் சந்நதி உள்ளது. மேல் பிராகாரத்தில் நிருதி விநாயகர், வள்ளி-தெய்வானை- முருகன், கஜலட்சுமி, வடக்கில் சண்டிகேஸ்வரர் சந்நதிகள் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில் தனி மேடையில் தல விருட்சமான பலாமரம் பூக்களு டனும், காய்களுடனும் பூத்துக் குலுங்குகிறது.
உறையூரை தலைநகரமாகக் கொண்டு முதலாம் பராந்தகச் சோழன் ஆண்டு வந்த நேரம் அது. உறையூரிலிருந்து 12 மைல் தொலைவுக்கு அப்பால் பலா மரக்காடுகள் இருந்தன. அங்கே காட்டு மிருகங்கள் நிறைய வசித்தன. அந்தக் காட்டில் மான்கள் அதிகம். அந்த காட்டுப் பகுதி அகன்ற காவிரியை ஒட்டி இருந்ததால் கவரி மான்களும் புள்ளி மான்களும் துள்ளிக் குதித்து அங்கேயே நீர் அருந்தி இளைப்பாற வருவதுண்டு. மன்னர் வாரந்தோறும் மான் வேட்டைக்கு அங்கே செல்வார்.
அப்படி ஒருநாள் சென்றபோது, கண்ணில் பட்ட ஒரு மானை விரட்டிச் சென்றார், மன்னர். உயிருக்குப் பயந்த அந்த மான் ஓடிச்சென்று ஒரு பலாமரப் பொந்தினுள் சென்று மறைந்துகொண்டது. சினம் கொண்ட மன்னர் அம்பை ஏவினார். அம்பு மான் மேல் பட்டது. குருதி செந்நீராய் கொட்டியது. மான் துவண்டு விழ ஒரு அசரீரி ஒலித்தது: 'மன்னா இந்த மரத்தில் யாம் இருக்கிறோம். எனக்காக ஒரு ஆலயம் கட்டு' என்றது அந்த அசரீரி. உணர்ச்சிவயப்பட்டு நின்ற மன்னன் 'அப்படியே செய்கிறேன்' என்றார். செந்நீர் பெருகி அசரீரி ஒலித்ததால் அந்தப் பகுதி அமைந்த ஊருக்கு திருச்செந்துறை எனப் பெயரிட்டார் மன்னர். அது முழுவதும் மணற்பாங்கான பகுதி. கருங்கல் பாறைகள் அறவே கிடையாது.
எனவே, மன்னர் வாக்கு தந்தபடி அங்கு அவரால் கோயில் கட்ட இயலவில்லை. ஆனால், அவரது ஆசையை அவரது மகளான பூதி ஆதித்தம் பிடாரி என்ற குந்தவி நிறைவேற்றி வைத்தாள். சுமார் 40 மைல் தொலைவிலுள்ள பச்சைமலை மற்றும் கொல்லி மலையிலிருந்து கருங்கற்களை கொண்டு வந்து குந்தவி இந்த சிவாலயத்தை கட்டினார். இந்த ஆலயம் கட்ட இரண்டு ஆண்டு காலம் ஆயிற்றாம். தினசரி இரண்டு கால பூஜை இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆடிக் கிருத்திகை, பிரதோஷ நாட்கள், மாத அமாவாசை, பௌர்ணமிகள், நவராத்திரி, கார்த்திகை மாத திங்கட்கிழமைகள், மார்கழி 30 நாட்கள், சிவராத்திரி ஆகிய நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தன் மேனியை பலாப்பழத்தை போல் முட்களாய் அமைத்துக் கொண்டிருக்கும் இத்தல இறைவன் தன் பக்தர்களை முட்களாய் வாட்டும் துன்பத்திலிருந்து காத்து, இனிமையான சுளை போன்று வாழ்க்கையில் நற்சுவை அருள்கிறார். திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்செந்துறை.
No comments:
Post a Comment